அதிசயங்கள் (சித்திக்கு பின்)

உயிரை காத்தவர்

என் பெயர் முத்து. நான் வடலூரைச் சேர்ந்தவன். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஐயாவை வழிபட்டு வருகிறேன். ஒரு நாள் மாலையில் (சுமார் 5.30மணியளவில்) எனது மகன் குமரனுக்கு திடீரென்று வலிப்பு வர ஆரம்பித்தது. ஐந்து நிமிடஇடைவெளியில் 3முறை வலிப்பு அவனுக்கு ஏற்பட்டது. நானும் எனது மனைவியும் பயந்து விட்டோம். நான் என்ன செய்வது என்று தெரியாமல் ஐயாவை மனமுருகி வேண்டிக்கொண்டே மருத்துவமனைக்கு எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றேன். அங்கு மருத்துவர் அவனை பரிசோதித்து கொண்டிருக்கும் போது, அவனுக்கு மீண்டும் ஒரு முறை வலிப்பு ஏற்பட்டது. பின்பு அவனை முழுவதுமாக பரிசோதித்த மருத்துவர், இது ஒன்றும் வலிப்பு நோய் அல்ல அதிகப்படியான காய்ச்சலால் இந்த வலிப்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். பிறகு அவனுக்கு மருந்து கொடுத்து மருத்துவர் 24நான்கு மணிநேரத்திற்குள்ளாக இன்னொரு முறை அந்த வலிப்பு வந்தால் அவனை சிதம்பரம் (O.P)மருத்துவமனையில் அனுமதிக்கும் படி கூறினார். நாங்கள் வீட்டிற்கு வந்து மருத்துவர் கொடுத்த மருந்தை அவனுக்குக் கொடுத்து விட்டு, தண்ணீரில் வெள்ளை துணியை நனைத்து, நனைத்து அவன் நெற்றியில் வைத்து வைத்து எடுத்தோம். மஞ்சளை பாலில் கலந்து அவனது உடல் முழுவதும் பூசினோம். சிறிது நேரம் கழித்து அவனும் தூங்க ஆரம்பித்தான். பிறகு இரவு 9மணியளவில் அவனுக்கு அதிகபடியான வலிப்பு ஏற்பட்டது. அவன் பெருமூச்சு இழுத்து விட்டபடியே மூச்சுபேச்சு இல்லாமல் தன் சுயநினைவை இழந்தான். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் மனைவி கத்தி அழ ஆரம்பித்தாள். அவளை என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே வள்ளலாரிடம் குழந்தையை காப்பாற்றுமாறு அழுது வேண்டினேன். மூச்சுபேச்சு இல்லாமல் இருந்த என் மகன் குமரன் நான் வேண்டிய சில வினாடிகளில் பச்சை நிறத்தில் வாந்தி வாந்தியாக எடுத்தான். பிறகு குழந்தை சில வினாடிகளிலேயே ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பினான். பிறகு இருசக்கர வண்டியில் நாங்கள் அவனை மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். அப்போது மருத்துவமனை மூடும் நேரம் ஆகியது. அங்கு இருந்த நர்ஸ் (Nurse)மருத்துவர் இப்போது தான் கிளம்பிச் சென்றதாகக்கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் அந்த மருத்துவர் தெரு முனைக்கு சென்றிருந்தார். எனது மனைவி அழுது கத்திக் கொண்டே இரு சக்கரத்தில் நாங்கள் வருவதை பார்த்த மருத்துவர் ஏதோ பிரச்சனை என்று நினைத்து தாமாகவே மருத்துவமனைக்குத் திரும்பி வந்தார். அவர் வந்தவுடன் என்னுடைய குழந்தையை பரிசோதித்து அவனுக்கு தேவையான சிகிச்சை அளித்து 1மணிநேரம் தாங்கும் என்றும் அதற்குள் அவனை சிதம்பரம் (O.P)மருத்துவமனையில் எடுத்துச் செல்லுமாறும் கூறினார். பிறகு நான் எனது நண்பர் பாஸ்கரனுக்கு போன் செய்து வண்டி எடுத்து வருமாறு கூறினேன். நண்பருக்கு கார் டிரைவர் கிடையாது. அவருடைய மாமனாருடன் கார் டிரைவரும் வீட்டிற்கு அன்று வந்திருந்தார். உடனே நண்பர் கார் டிரைவருடன் அந்த இடத்திற்கு வந்தார்.

நான் வடலூருக்குப் புதியவன் அதிகமான நண்பர்களோ, உறவினர்களோ கிடையாது. ஐயாவை நம்பியே வந்தேன். அந்த நேரத்தில் என் கையில் பணம் குறைவாக இருந்தது. அந்த நேரத்தில் கார் டிரைவருடன் வந்த நண்பர் பாஸ்கரன் கேட்காமலே பணம் கொடுத்து உதவினார். மற்றொரு நண்பர்(மனோகர்) என்னுடன் காரில் வந்து எல்லா உதவிகளையும் செய்தார். பிறகு நான், எனது மனைவி, நண்பர் மற்றும் வீட்டின் உரிமையாளர் அனைவரும் அந்த காரில் சிதம்பரம் (o.p)மருத்துவமனைக்கு சென்றோம். செல்லும் வழியிலேயே என் குழந்தை மீண்டும் ஒருமுறை அந்த காரிலேயே வாந்தி எடுத்தான். சில நிமிடங்களில் என் குழந்தை சகஜ நிலைக்குத் திரும்பினான். காய்ச்சலும் குறைந்தது.

“காரில் வந்த மனோகரின் நண்பர் ஒருவர் சிதம்பரத்தில் வசிக்கிறார். அங்கு நாங்கள் வருவதற்கு முன்பாகவே அந்த மருத்துவமனைக்கு தன் உதவியாளருடன் காரில் வந்து, எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரவு முழுவதும் உடனிருந்து செய்தார்”. அவனை மருத்துவமனையில் அனுமதித்தோம். பிறகு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு மருந்து கொடுத்து அவனுக்கு பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று என்னிடம் கூறினார்கள். இருந்தாலும் அவனை 24மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்கள். பிறகு மூன்று நாள் கழித்து நாங்கள் வீடு திரும்பினோம். அவசரமாகச் சென்றதால் அது அரசாங்க மருத்துவமனை என்று எனக்கு தெரியாது. ஆயினும் குறைந்த கட்டணத்தில் அவர்கள் மிகவும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

குறிப்பு:

ஐயாவை நம்பி வந்த எனக்கு பிரச்சனை வந்தாலும் 'யாமிருக்க பயமேன்'என்று நண்பர்களையும், சுற்றத்தார்களையும் அனுப்பி உதவியது ஐயாவின் கருணையே என்று திடமாக நம்புகிறேன்.

அய்யாவின் ஆசியால் உடல் நிலையில் மாற்றம்

என் பெயர் தினகரன், எனது ஊர்சிதம்பரம். நானும் என் குடும்பத்தாரும் ஐயாவின் பக்தர்கள். என் மனைவியின் உடல்நிலை மோசமடைந்து, எடை குறையத் தொடங்கியது, முகமும் சற்று வெளிறத் தொடங்கியது. இதனால் கவலை அடைந்த நான் என் நண்பனிடம் இதைப் பற்றிக் கூறினேன். அவன் அய்யாவிடம் தியானம் புரிகையில் முதலில் அவனை மருத்துவரிடம் காட்டச் சொல் என்று கூறினார். ஏதாவது நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்னாகுமோ, ஏதாகுமோஎன்ற பயமும் பற்றிக் கொண்டது. ஆயினும் இரண்டொரு நாள் கழித்து கணவன் மனைவி இருவரும் வந்து சித்திவளாகத்தில் (சித்திவளாகம் ஐயா சித்தி பெற்று அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கும் இடம்) ஒரு இரவு தங்க வேண்டும் என்று ஐயா கூறியிருந்தார். இதை என் நண்பன் மூலம் கேட்ட நான் மிகவும் மகிழ்வடைந்தேன். ஏனெனில் அவரது கருணையே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என நான் தீவிரமாக நம்பினேன். சொன்னது போலவே நாங்கள் இருவரும் சித்திவளாகம் சென்று ஒரு இரவு தங்கி வந்தோம். என் மனைவியின் உடல் நலமும் முன்னேறத் தொடங்கியது. என் நண்பரிடத்தில் ஐயா என் மனைவியின் உடலில் ஒரு வயதானவரின் ஆவி புகுந்து இருந்ததாகவும், அதனால்தான் அவளுக்கு உடல் நிலை மோசமானதாகவும் கூறினார். அந்த ஆவியை ஐயா விரட்டிவிட்டார். நானும் என் மனைவியும் ஐயாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைக் கூறினோம்.

வயிற்றுவலியைத் தீர்த்தவர்

என் பெயர் மணி. நான் திருநெல்வேலியை சேர்ந்தவன். எனக்கு அல்சர் நோயிருந்தது. எனக்கு இந்த நோய் வரும்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணமளவுக்கு வலியிருக்கும். இந்த நோய் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. இந்த நோயை எப்படி குணப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது நண்பர் ஒரு வள்ளலார் பக்தர். அவரிடம் நான் இந்த நோயைப் பற்றித் தெரிவித்தேன். அவர் எனக்காகத் தியானம் செய்து ஐயாவிடம் இதுபற்றிக் கேட்கையில் ஐயா கூறியது என்னவென்றால் அவன் என்னை வழிபட்டு சன்மார்க்க வழியில் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அந்த நோய் குணமாகிவிடும் என்று சொன்னார். அன்று முதல் (ஜுன் 2008) வள்ளலாரை வழிபட ஆரம்பித்தேன். என் அல்சர் நோய் படிப்படியாக குறையத் தொடங்கியது. பிறகு 1 வருடம் கழித்து விரதம் இருக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயிறுவலி வரவில்லை. இப்போது என்னால் மூன்று வேளையும் கூட விரதம் இருக்க முடிகிறது. இவை எல்லாமே ஐயாவின் கருணையால் தான் நடந்தது.

ஜோதி தரிசனமும் அறுவை சிகிச்சையின்றி குணமடைதலும்

என் பெயர் சுப்ரஜா, செங்கல்பட்டில் வசிக்கிறேன். என் வீட்டருகில் 70 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் இருவரும் ஐயாவின் பக்தர்கள். அவர் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியால் மிகவும் அவதிபட்டார். முதலில் மருத்துவர் இதற்கு அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்தார். அவரின் வயதைக் கருதி நான் ஐயாவிடம் பிரார்த்தனை செய்தேன். அதில் ஐயா 'அவர் பூசத்தில் வரும் ஜோதி தரிசனம் பார்ப்பாராகில், அவர் உடல்நிலை முன்னேற்றமடையும்’ என்றுரைத்தார். (மாதப்பூசம்-ஒவ்வொரு மாதமும் வடலூரில் பூச நட்சத்திரம் வரும் நாளில் இரவு 7.30 மணிக்கு 6 திரைகள் விலக்கி ஜோதி காட்டப்படும்.) நான் இதை அம்முதியவரிடம் தெரிவிக்க அவர் முதலில் தயங்கினார். அவருக்கு பல வேலைகள் இருந்தன. இதைக் குறித்து நான் ஐயாவிடம் முறையிட்டேன். ஐயா 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலையை விடு' என்று கூறினார். அதைப் போலவே முதியவர் மனம் மாறி ஜோதி தரிசனம் செய்துவிட்டு வந்து மருத்துவரிடம் சென்றார். முன்பு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிய அதே மருத்துவர் இப்போது மருந்தின் மூலமே இதை சரி செய்து விடலாம் என்று கூறினார். முதியவரும், அவரது உறவினர்களும், நானும் மிகவும் மகிழ்ந்தோம்.

குறிப்பு: ஜோதி தரிசனத்தின் சிறப்பை உணருங்கள். பங்கு பெற்று பயன் பெறுங்கள்.

வாடகைக்கு வீடு - 12 மணி நேரத்தில்

நான் சென்னையை சேர்ந்த லட்சுமணன். வள்ளலாரின் தீவிர பக்தன். வாடகைக்கு வீடு பார்த்து ஒரு புது வீட்டில் குடியேறினேன். வீடு பெரிதாக இருந்த போதும் அறைகளும், தோட்டமும் சுத்தமாக இல்லை. முதலில் நாங்கள் அதை சுத்தம் செய்தால் சரியாகி விடும் என்று நம்பினோம். கிடைத்த வீட்டை விட மனமுமில்லை. என் தாயின் உடல்நிலை சரியாயில்லை. எனவே நாங்கள் அதை விரைவாக சுத்தம் செய்து குடியேற நினைத்தோம். ஒன்றரை நாள் சுத்தம் செய்தும் பெரிதாக ஏதும் முன்னேற்றமில்லை. தாயின் உடல்நிலை அந்த சுத்தமற்ற சூழ்நிலையால் மேலும் நலிவுற்றது. இதனால் மிக விரைவாக நாங்கள் வேறு வீடு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். எங்கள் குடும்ப நண்பரும் அவரது வீட்டாரும் எங்களுக்கு புது வீடு தேடுவதில் உதவினார்கள்.

காலை 10 மணிக்கு அய்யாவிடம் பிராத்தனை செய்துவிட்டுத் தேட ஆரம்பித்தோம். மணி சுமார் 11.30. ஒரு வீடு பார்த்தோம். ஆனால் எங்களுக்கு அது பிடிக்கவில்லை. வரும் வழியில் ஒரு மனிதர் வலிப்பு வந்து கீழே விழுந்து கிடந்தார். அவருக்கு சாவி கொடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தோம். அம்மனிதர் வெளியூரில் இருந்து வந்திருக்கிறார். கையில் காசில்லாததால் அவர் காலையிலிருந்து பட்டினி. அவருக்காக நாங்கள் பிஸ்கட்டும், அருகிலிருந்தவர்கள் டீயும் கொடுத்து உதவினார்கள். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளி. பணமில்லாத காரணத்தால் அங்கு தங்கி அவரால் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. அவர் ஏதாவது சிறு வேலை கிடைத்தால் அதைக் கொண்டு உணவுக்கும், ஊர் செல்வதற்கும் வழி கிடைக்கும் என்று இருந்திருக்கிறார். நாங்கள் அவர் ஊர் செல்வதற்கும் அவரின் சிகிச்சைக்காகவும் ரூ.1000/- கொடுத்து உதவினோம்.

அகவல் வரிகள் (961, 962)

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே.

ஜீவகாருண்ணிய விளக்கம்:
ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் என்றறிய வேண்டும்.

ஆன்ம உருக்கம் – ஜீவர்கள் பசி, கொலை, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம் இவற்றால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும், கேட்ட போதும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.

பிறகு நாங்கள் பல தெருக்களுக்குச் சென்று வீடு தேடினோம். மாலை 4.30 மணிக்கு வேறு வழியின்றி உணவு உண்டோம். ஐயாவிடம் தீவிரமாக பிராத்தனை செய்தோம், மீண்டும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இரவு 7.30 மணிக்கு ஒரு வீடு கிடைத்தது. அந்த வீட்டில் சகல வசதிகளும் இருந்தது (விளக்கு, மின்விசிறி, கீசர், முதலியன) அதை அவர்கள் குறைந்த வாடகைக்குத் தந்தனர். அவ்வீட்டின் உரிமையாளர்கள் மிகவும் கருணையுள்ளம் கொண்டவர்கள். அவர்கள் முன்பணம் எதையும் பெற்றுக்கொள்ளாமல் இரவானாலும் பரவாயில்லை என்று அன்றே வீட்டில் குடியேற அனுமதி கொடுத்தார்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அன்றே குடியேறினோம் ஐயாவிற்கு நன்றி செலுத்தியபடியே.

பத்து நிமிடத்தில் பக்தராகுதல்

என் பெயர் சுந்தரம். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் என் கால் முட்டி, கணுக்கால் முதலிய இடங்களில் வலி ஏற்பட்டது. மிகவும் களைப்புற்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையிலேயே மாலை வரை படுத்திருந்தேன். என் நண்பனிடம் இது குறித்து செல்போனில் (அவன் ஐயாவின் பக்தன்) கூறினேன். அவன் எனக்காக ஐயாவிடம் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனையில் ஐயா அவனிடம் 'கவலையுற வேண்டாம்அவன் வலி 10 நிமிடத்தில் சரியாகி விடும்.ஆனால் அவன் என்னை நம்பவேண்டும். என்னை வழிபடவேண்டும்’ என்று கூறினார். இதை உடனே என் நண்பன் எனக்கு போனில் தெரிவிக்க, காலையிலிருந்து இருக்கின்ற வலி 10 நிமிடத்தில் மருந்தில்லாமல் குணமாகுமா என்று என்னுள் கேள்வி? நம்ப முடியவில்லை, ஆனால் வலி விட்டால் போதும் என்பதால் வலி சரியானால் அவரை வழிபடுவதாக வேண்டினேன். ஆச்சரியப்படும்படியாக 10 நிமிடத்திற்குள் என் வலி முற்றிலும் நீங்கியது. நான் இப்பொழுது தீவிர ஐயா பக்தனாகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா?

விளக்கைச் செப்பனிடுதல்

என்பெயர்மனோகர். நான்மதுரையில்வசித்துவருகிறேன். என் வீட்டில் ஐயாவின் விளக்கு ஒன்று உள்ளது. அதன் உச்சியில் உள்ள கூம்பு வடிவம் உடைந்துவிட்டது. உடனடியாக வேறு புதிய விளக்கு கிடைக்காததால் அதைச் சரிசெய்யத் தீர்மானித்தோம். நானும் என் மனைவியும் பல வெல்டிங் கடைகளுக்குச் சென்று அதை ஒட்டித்தருமாறு கேட்டோம். அவர்களோ மறுத்து விட்டனர். கடைசியாக ஒரு கடைக்குச் சென்று கேட்க அவரும் மறுத்து விட்டார். மனமுருகி ஐயாவிடம் பிரார்தித்தோம். திடீரென்று கடையின் உள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு இளைஞன் விளக்கைக் குறித்து எங்களை விசாரித்தான். நாங்கள் வள்ளலார் பக்தர்கள் என்று கூறி அவ்விளக்கின் முக்கியத்துவம் குறித்து அவனுக்கு விளக்கினோம். பக்தியோடு அதனைக் கேட்ட அவ்விளைஞன் கவனத்துடன் அதைச் சரி செய்ய முற்பட்டான். அவன் 2 முறை முயற்சித்தும் அக்கூம்பை விளக்கில் சரியாகப் பொறுத்த முடியவில்லை. அருகிலிருந்தவரோ, இது வேலைக்கு ஆகாது என்று கூறி மனவருத்தமடையச் செய்தார். நாங்கள் மீண்டும் ஐயாவிடம் வேண்ட 3வது முறை அக்கூம்பு விளக்கில் சரியாகப் பொருந்தியது. ஒட்டியதற்கு ஐயாவிடமும், அவனிடமும் நன்றி செலுத்திய பின், அவ்விளைஞனிடம் கூலி பற்றி கேட்டோம். அவரோ நான் இதை ஐயாவிற்காக செய்தேன் பணத்திற்க்காக அல்ல என்று கூறி கூலி பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஐயாவே அவர் மனதில் புகுந்து அவ்வேலையை முடித்துக் கொடுத்தார் என திடமாக நம்புகிறோம். ஐயா தன் பக்தர்களுக்கு எங்கும், எப்போதும் உதவுகிறார்.

ஐயாவின் ஆசியால் ஆபத்தற்ற பயணம்

என்பெயர்ராஜு. நான்சென்னையைசேர்ந்தவள். ஒரு குடும்ப பஞ்சாயத்துக்காக என் கணவரும் அவரது மூன்று நண்பர்களும் வெளியூர் சென்றிருந்தனர். எனக்குச் சற்று பதற்றமாக இருந்தது. இந்த பஞ்சாயத்தின் முடிவு வன்முறையில் முடியலாம் என்று என் உள்ளுணர்வில் தோன்றியது. அன்று எனக்கு இரவில் ஏற்பட்ட கனவில் என் கணவரின் நண்பர் தலையில் கட்டுடன் காட்சியளித்தார். நான் மிகவும் பயந்து போய் ஐயாவிடம் அன்றிரவே பிராத்தித்தேன்.

பிராத்தனையில் ஐயா தோன்றி 'கவலையுற வேண்டாம், என் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புவார்கள்' என்று கூறினார். அதற்காக நான் 51 முறை வடலூர் சத்திய ஞான சபையை சுற்றி வரவேண்டும் எனக் கூறினார். நானும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தேன். என் கணவரும் அவரது நண்பர்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரும்பினர். இதில் நாம் அனைவரும் அறிய வேண்டியது யாதெனில் ஐயா எப்பொழுதும் தன் குழந்தைகளை வருமுன் காத்து நிற்கிறார்.

கைவலியை நீக்கியது

என் பெயர் விஜி. எனது தங்கையின் வலது கையில் கடுமையான வலி இருந்தது. நான் ஐயாவிடம் அவளின் வலியை நீக்கும்படி வேண்டினேன். அன்று எனக்கு ஏற்பட்ட கனவில் ஐயா 'இரு நாட்கள் பொறுத்திரு' என்று கூறி மறைந்தார். எனக்கோ வலியை நீக்குமாறு கேட்டால் பதில் கூறாமல் இன்னும் இரண்டு நாட்கள் பொறுக்குமாறு கூறுகிறாறே என்று சற்று வருத்தமாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து ஐயா கூறியபடி வலி முற்றிலுமாக நீங்கியது. ஐயாவின் கருணையை எண்ணி வியந்தோம்.

தலைவலியிலிருந்து விடுதலை

என் பெயர் ராஜீ, வள்ளியூர் என் சொந்த ஊர். கடும் தலைவலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமான மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. வலி பொறுக்க முடியாது ஐயாவிடம் வலியை நீக்குமாறு வேண்டினேன். எனக்கு மனதில் ஐயா திருநீறை என் நெற்றியில் இடுவதுபோல் தோன்றிற்று. நானும் அவ்வாறே இரண்டு நாட்களாக செய்துவந்தேன். மூன்றாவது நாளிலிருந்து தலைவலியிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றேன்.

களவும் கருணையும்

சென்னையைச் சேர்ந்த வள்ளலார் பக்தர் ஒருவர் தன் குடும்பத்தோடு வடலூர் சென்றிருந்தார். இரவில் மேட்டுக்குப்பத்தில் இரவு தரிசனம் முடித்து அங்கேயே குடும்பத்தோடு தங்கினார். அன்றிரவு அவருக்கு ஒரு மோசமான கனவு தோன்றியது. உடனடியாக விழித்து அய்யாவிடம் முறையிட்டு வேண்டி மீண்டும் உறங்கினார். அப்பொழுது கிட்டத்தட்ட இரவு 2.30மணி இருக்கும். மறுநாள் குடும்பத்துடன் வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய வீடு உடைக்கப்பட்டு, வீடு மற்றும் பீரோவில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறியிருந்தன. மிகவும் அதிர்ந்து போன அன்பர் இச்சம்பவம்குறித்துகாவல்துறையிடம் புகார் அளித்தார்காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விரைவில் கள்வரை பிடித்துவிடுவோம் என்று கூறி உறுதியளித்துச் சென்றனர்.

ஆனால் ஆச்சரியப்படும்படியாக அன்பரின் வீட்டில் எந்த நகையும், பணமும் கொள்ளை போகவில்லை. மாறாக, அவர் உண்டியலில் சேர்த்து வைத்த (அன்னதானத்திற்காக) ரூ. 3500/- பணத்தை மட்டும் திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர். தங்க மோதிரம், தங்க கைகடிகாரம் அனைத்தும் பீரோவில் அப்படியே இருந்தது. மேலும் திருடர்கள் பீரோவை உடைத்துப் பார்த்தபோதும், அவர்களால் அய்யாவின் திருநீறு மற்றும் அன்னதானச் சீட்டு மட்டுமே குவிந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. தங்க நகைகள்மற்றும் பணத்தை அவர்கள் எப்படி எடுக்க மறந்தார்கள் என்பது புதிராகவே உள்ளது. இவற்றை எல்லாம் ஐயாவைத்தவிர வேறு யாரால் செய்ய முடியும். மேலும் ஆச்சர்யப்படும்படியாகஅத்திருடர்கள் பக்கத்துத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 8 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ளனர். அப்பொழுது மணி அதிகாலை 3.இது மேலும் அன்பருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. ஏனென்றால் இந்தத் திருட்டு நடந்த நேரம்தான்அவருக்கு வந்த மோசமான கனவிற்காக மேட்டுக்குப்பத்தில் அய்யாவிடம் முறையிட்டு பிராத்தனை செய்த நேரம். ஐயாவின் கருணை அவர்மேல் நிறைந்து இருப்பது அவருக்கு மெய்சிலிர்க்க வைத்தது.

வீடு தந்த பாடம்

சத்தியா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வள்ளலாரின் பக்தர்கள். அவர்கள் தங்களிடம் உள்ள பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்க நினைத்தனர். அதன்படி ஒருவரிடம் விற்று, அவ்வீட்டின் மொத்தத் தொகையில் பாதியை முன்பணமாக அவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். மீதித் தொகையை வீடு வாங்கியவர் ஆறு மாதத்திற்குள்ளாக தனது தென்னந்தோப்பை விற்றுத் தருவதாகக் கூறினார். இதற்கு சத்தியா ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அச்சமயத்தில் சந்தை நிலவரப்படி வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு மிகவும் உயர்வாகவே இருந்தது. சத்தியாவும் அவர் நினைத்த தொகையை விட அதிகமாகவே இடம் வாங்கியவரிடம் ஒப்பந்தம் செய்து இருந்தார்.

சத்தியா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் எந்த ஒரு செயலையும் அய்யா சொற்படியே செய்வது வழக்கம். சத்தியா அவருடைய பழைய வீட்டை விற்று முன்பணமாக பெற்ற தொகையிலிருந்து புதிய வீடு வாங்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக அய்யாவிடம் முறையிட்டுக் கேட்டபொழுது அய்யாவிடமிருந்து வேண்டாம் என்று பதில் வந்தது. பிறகு நான்கு மாதம் கடந்த நிலையில் புதிய வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அய்யாவின் எச்சரிக்கையையும் மீறி அந்தப் புதிய வீட்டை சத்தியா திட்டமிட்டபடி வாங்கினார். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நிலம் மற்றும் வீடு தொடர்பான சந்தையின் மதிப்பு மிகவும் குறையத் தொடங்கியது. அக்காரணத்தினால் சத்தியாவின் பழைய வீட்டை வாங்கியவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பை அதிகமான விலைக்கு அவர் நினைத்தப்படி விற்க முடியாமல் தவித்தார். ஒப்பந்த தேதிக்கு மேலாகவே ஆறுமாதம் கழிந்தது. அப்போதும் அவரால் ஒப்பந்தத்தின்படி மீதித் தொகையைத் தரமுடியவில்லை.

இந்நிலையில் சத்தியாவின் குடும்பத்தினர் மிகவும் குழப்பத்திற்கு ஆளானார்கள.ஏனென்றால் அவ்வீட்டை வாங்கிய உரிமையாளர் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு முன்பணத்தை திரும்பக் கேட்டுவிடுவாரோ என்ற பயம் அவர்களை ஆட்கொண்டது. இரு தரப்பினரும் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தனர். அப்பொழுதுதான் சத்தியாவின் குடுமபத்தினர் அய்யா ஏன் அந்தப் புதிய வீட்டை வாங்க வேண்டாம் என்று கூறினார் என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள். சத்தியாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தாங்கள் செய்த குற்றத்திற்காக வருந்தி அய்யாவிடம் முறையிட்டனர். கருணைக் கடலான அய்யா அவரின் பிரச்சனையை எளிதாக முடித்து வைத்தார். ஓரிரு நாட்களில் சத்தியாவின் பழைய வீட்டை வாங்கியவர் தாமாகவே முன்வந்து வேறு ஒருவரிடம் இவ்வீட்டை நீங்கள் விற்க விரும்பினாலும் தாம் சம்மதிப்பதாகக் கூறினார். அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முன்வந்தார். இதைக் கேட்டு மகிழ்ந்த சத்தியாவின் குடும்பத்தினர் அவ்வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கினர். அய்யாவின் ஆசியோடு அந்த பழைய வீட்டை வேறு ஒருவரிடம் விற்றனர். அதன் மூலம், பழைய வீட்டை வாங்கியவருக்கு சேரவேண்டிய தொகையை மிக எளிதாகக் கொடுத்தனர். இந்த கொடுக்கல்/வாங்கல் பிரச்சனை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடந்தது.

குறிப்பு: அய்யாவின் வார்த்தை ஆண்டவரின் வார்த்தை. அதன்படி நடப்பது நமக்கு என்றும் நன்மை அளிக்கும்

இடமாற்றமும் மனமாற்றமும்

நான் சென்னையிலுள்ள சின்மையா நகரைச் சேர்ந்த சங்கர். நான் ஐயாவின் பக்தன். சீனியர் மேனேஜராக கனரா வங்கி தேனி கிளையில் பணபுரிகிறேன். என் மனைவியும் 2 குழந்தைகளும் சென்னையில் வசிக்கிறார்கள். எனது மனைவியின் உடல் நிலை திடீரென்று மோசமடைந்தது. அது படிப்படியாக மிகமிக மோசமான நிலையை அடைந்தது. நான் என் குடும்பத்தை கவனிப்பதற்காக சென்னைக்கு மாற்றம் கேட்டேன். என் குடும்பத்தை கவனிப்பதற்காக நான் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் விடுமுறையில் இருந்தேன். இந்த நிலையிலிருந்து எங்களை மீட்குமாறு ஐயாவிடம் மனமுருக பிரார்த்தித்தேன். இந்த நேரத்தில் என் மனைவி ஒரு கனவு கண்டாள். அதில் ஐயா என்னை ஏழு நாட்கள் (வியாழன் - புதன்) குறிப்பிட்ட நேரம் பிராத்தனை செய்யுமாறும், எட்டாம் நாள் 21 விதமான உணவு வகைகளை 21 விதமான உயிர்களுக்கு (மனிதன், புறா, எறும்பு, மீன், பசு......) அளிக்கும்படியும் கூறினார். நான் அதை முழுமையாக நம்பி அவ்வாறே செய்தேன். அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் இடமாற்றங்கள் நடந்தன. எனக்கு எந்த இடமாற்றமும் கிடைக்கவில்லை. அப்பொழுதும் ஐயா கைவிடமாட்டார் என நம்பிக்கையோடு இருந்தேன். 1 மாதத்திற்குபின் எனக்கு மட்டும் தனியாக சென்னைக்கு மாற்றம் வந்தது. ஐயா எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சிகள் யாவும் என் நம்பிக்கையை அதிகபடுத்தியவுடன் என்னை தீவிர ஐயாவின் பக்தனாகவும் மாற்றியுள்ளது. ஐயா தந்த இடமாற்றமும், மனமாற்றமும் என்னை மிகவும் மகிழச்செய்துள்ளது.

கடன் பிரச்சனையைத் தீர்த்தல்

ராமு மற்றும் கீதா தம்பதியினர்சென்னையில் வசித்து வருகின்றனர். ராமுவின் சொந்தக்காரர் ஒருவருக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. அவர் ராமுவிடம் சென்று கடன் கேட்டார். ராமுவிடம் அவருக்குக் கொடுக்கத் தேவையான பணம் இல்லாத காரணத்தால் கடன் வாங்கித் தருவதாகக் கூறினார். பின் சாட்சியாக இருந்து வட்டிக்குக் கடன் வாங்கி உறவினருக்குக் கொடுத்தார். சில மாதங்கள் கழிந்தது. ராமுவின் சொந்தக்காரரோ கடன் வாங்கியதையே மறந்து விட்டார். நான்குமாதங்கள் கடந்த நிலையில் கடன் கொடுத்தவர் ராமுவின் வீட்டிற்குச் சென்று “நீங்கள் உங்கள் உறவினருக்குக் கடன் வாங்கிக் கொடுத்த பணத்திற்கு இந்நாள்வரை வட்டியும் வரவில்லை, அசலும் வரவில்லை. அந்தப் பணத்திற்கு நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள், இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் வட்டியும் அசலும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்” என்று கண்டிப்புடன் கூறிச் சென்றார். அந்த நேரத்தில் ராமுவால் அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்யமுடியாத காரணத்தினால்அவர் என்ன செய்வது என்று அறியாமல் குழம்பினார். இந்த சூழ்நிலையில் அவர் அவருடைய நண்பரிடம்தன் நிலையை எடுத்துக் கூறினார். வள்ளலார் பக்தரான அவர் நண்பர் ராமுவிற்காக வள்ளலாரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு “நீ முழுமனதுடன் வள்ளலாரை வழிபட வேண்டும். உன் பிரச்சனை 7 நாட்களுக்குள் தீரும், தீர்ந்தவுடன் வடலூர் வரவேண்டும்” என்று வள்ளலார் தெரிவித்ததாகக் கூறினார். ராமுவும் தன் நண்பர் கூறியபடியே இந்த பிரச்சனையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி மிகவும் உருக்கமாக அய்யாவிடம் வேண்டிகொண்டார். ஒரு சில நாட்களில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ராமுவின் மாமனார் ராமுவின் வீட்டிற்கு வந்தார். ராமுவின் திருமணத்தின்போது அவருடைய மாமனார் போடுவதாகச் சொன்ன நகைகளை பணப் பற்றாக்குறை காரணமாக அவர் மாமனாரால் அப்போழுது போட முடியவில்லை. அந்நகைகளை ராமுவின் மாமனார் இச்சமயம் அவரிடம் கொடுத்தார். மிகவும் ஆச்சரியப்பட்ட ராமு இந்த நகைகளை விற்றுக் கடனை அடைத்து அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட்டார். அந்த இக்கட்டான நேரத்தில் உதவி புரிந்ததற்காக அய்யாவிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அச்சம்பவத்திற்குப் பிறகு வடலூர் சென்று வந்த அவர் தினமும் அய்யாவை வழிபட ஆரம்பித்து அய்யாவின் தீவிர பக்தராக மாறினார்.

கண் நோயை குணப்படுத்துதல்

செந்தில் குமார் என்பவர் கிண்டியில் வசித்து வருகிறார். அவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் தினமும் கணிப்பொறியை பயன்படுத்துபவர். அவருக்கு திடீர் என்று கணிப்பொறியை பார்த்தால் கண்ணில் வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து கணிப்பொறியை 5 நமிடத்திற்க்கு மேல் பார்க்க முடியவில்லை. இந்த பிரச்சனை அவருக்கு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்தது, பல மருத்துவர்களிடம் சென்றும் பயனில்லை. அவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் நண்பரிடம் இந்த பிரச்சனையைப் பற்றித் தெரிவித்தார். அவர் நண்பர் வள்ளலார் பக்தர். உடனே அவரது நண்பர் வள்ளலாரின் புகைப்படம் ஒன்றை கொடுத்து அதனை வழிபடுமாறு கூறினார். செந்தில் குமார் தினசரி வள்ளலாரின் புகைப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். அவர்நண்பரின் கனவில் வள்ளலார் தோன்றி, வள்ளலாரின் புகைப்படத்தை வைத்து தினசரி 30நிமிடங்கள் 7 நாட்களுக்கு வழிபடும் படியும், இந்த நோய் குணமான பிறகு 50 உரைநடை புத்தகங்கள் மற்றும் 50 ஆறாம் திருமறை புத்தகங்கள் வாங்கி பக்தர்களுக்கு கொடுக்குமாறும் கூறினார். அவரும் தன் நண்பர் கூறியபடியே தினந்தோறும் அய்யா புகைப்படத்தின் முன் நின்று வழிபட்டார். பின் 7 நாட்களுக்கு பிறகு வள்ளலாரின் அருளால் அவரது கண் நோய் முழுமையாக குணமாகி இருந்தது. ஆச்சரியமடைந்த அவர் வடலூர் சத்திய ஞானசபை சென்று அங்கு ஜோதி தரிசனம் செய்து அங்கு 50 உரைநடை புத்தகங்களையும், 50 ஆறாம் திருமறை புத்தகங்களையும் அய்யா கூறியபடியே வாங்கி அன்பர்களுக்குக் கொடுத்தார். பின் அவர் சித்திவளாகம் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் அய்யாவின் அருளையும் சத்திய ஞானசபை மற்றும் சித்திவளாகத்திற்கும் உள்ள சிறப்பை உணர்ந்து கொண்டார்.

வீடு வாங்குவதற்கான பிரச்சனைக்கு பெருமானின் தீர்வு

வேளச்சேரியை சேர்ந்த சூரியா மற்றும் அவரது குடும்பத்தினர்கள்; வள்ளலாரின் பக்தர்கள். சூரியா சென்னையில் ஒரு புதிய வீடு வாங்க விரும்பினார். அச்சமயத்தில் அய்யா அவரின் கனவில் தோன்றி வீடு வாங்கும் போது கவனமாக இருக்கும்படி கூறினார். பல வீடுகளைப் பார்த்து அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். சூரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவ்வீடு மிகவும் பிடித்து இருந்த காரணத்தினாலும், மற்றும் வீட்டின் அனைத்து பத்திரங்களும் (ஆவணங்கள்) சரியான முறையில் இருந்த படியாலும், அவர்கள் அவ்வீட்டை வாங்க மிகவும் விருப்பமாக இருந்தார்கள். சட்டப்படி எல்லாம் சரியாக இருப்பதால் அவர் கனவைப் பற்றி கவலைப்படாது அந்த வீட்டு விலையின் மொத்த தொகையில் ஒரு பகுதியை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்தார்.

துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஒருவரிடம் கடன் பாக்கி வைத்து இருந்தார். இந்த விஷயத்தை வீட்டு உரிமையாளர் சூரியாவிடம் தெரிவிக்காமல் மறைத்து இருந்தார். ஆனால் அந்த கடன் கொடுத்தவரோ வீட்டு உரிமையாளரிடமிருந்து கடன் தொகை திரும்ப கிடைக்காத காரணத்தினால் வீட்டை விற்பதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவத்தை அறிந்த சூரியா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகினார்கள். அப்பொழுது தான் அய்யா ஏன் கனவில் இவ்வாறு தெரிவித்தார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டனர். உடனடியாக அவர் அய்யாவிடம் பிராத்தனை செய்து இப்பிரச்சனையில் இருந்து விடுவிக்க வேண்டினார். அய்யா அவரின் கனவில் தோன்றி அவரையும் அவரது குடும்பத்தினரையும் தைப்பூசம் அன்று ஜோதி தரிசனம் செய்வதற்காக வரச்சொல்வதாகக் கண்டார். அவரும் அவ்வாறே குடும்பத்தோடு ஜோதி தரிசனம் செய்தார். ஆச்சரியபடும்படுபடியாக, சூரியா வாங்கவிருந்த வீட்டின் மேல் வழக்கு தொடர்ந்த அந்த மனிதர் கடன் கொடுத்தவருடன் சமாதானம் ஆகி அந்த வழக்கை திரும்ப (வாபஸ்) பெற்றுக்கொண்டார். சூரியாவால் அவ்வீட்டை எளிதாக வாங்க முடிந்தது. இச்சம்பவத்திற்கு பிறகு சூரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் அய்யாவின் பெருமையும், கருணையும் புரிந்து கொண்டனர். அவருடைய எந்த ஒரு சொல்லுக்கும் அர்த்தம் உண்டு என்று உணர்ந்தார்.

உயிர்காத்தவர்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். ஒரு தடவை அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வள்ளலார் பக்தர் ஒருவர் அவரைச் சந்தித்து வடலூர் சென்று அவரது தாயாருக்காக பிரார்த்தனை செய்யும்படி கூறினார். அதற்காக அவர் வடலூரிலுள்ள ஞான சபைக்கும், சித்தி வளாகத்திற்கும் சென்று அவரது தாயாரின் உடல் நலம் சீராக வேண்டிக் கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவரது தாயார் சித்தி வளாகத் திருவறைக்கு முன் நின்று வள்ளல் பெருமானை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றார். அதன் பிறகு உடனடியாக அவர் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஓடத் தொடங்குகிறார். ஆனால் எமதர்மராஜா அவரை விடாமல் பின் தொடர்ந்து தன் வாகனத்தில் வந்து பிடிக்க முயற்சிக்கிறார். இவ்விருவருக்கும் நடுவில் திடிரென்று ஒரு வெள்ளாடை அணிந்த ஒரு வீரர் குதிரையில் சவாரி செய்து எமதர்மராஜா அவரை பிடிப்பதற்கு முன்பாக அவ்வீரர் ஹரியின் தாயை துக்கி கொண்டு தொலை தூரத்திற்குச் சென்று விடுகிறார். இப்பொழுது எமதர்மனுக்கும் அவரது தாயாருக்கும் உள்ள இடைவெளி அதிகமாயிற்று. அதன் பிறகு அவ்வீரர் ஹரியின் தாயை விட்டுவிட்டுச் சென்று விட்டார். அவ்வீரர் வள்ளலாரை தவிர வேறு யாராக இருக்க முடியும். இக்கனவு வந்த குறுகிய காலத்திற்குப் பிறகு, ஹரியின் தாயார் நோயிலிருந்து முழுவதுமாக விடுபட்டார். ஹரியின் தாய் பெயர் ஜோதி. ஹரி அவருக்கு தோன்றிய அக்கனவைப் பற்றியும் வள்ளலாரின் கருணையைப் பற்றியும் அவரது தாயாரிடம் பகிர்ந்து கொண்டார். ஆச்சர்யப்படும்படியாக அவரது தாயாரும் அவருடைய சிறிய வயதில் அவருடைய தந்தை வடலூருக்கு ஜோதி தரிசனம் செய்வதற்காக அவரை பல தடவை அழைத்துச் சென்றதாகவும், வள்ளலாரின் மீது கொண்ட பக்தி காரணமாகவே அவருக்கு ஜோதி என்று பெயரிட்டதாகவும் கூறினார். இச்சம்பவம் நடந்து ஐந்து வருடம் கழிந்து விட்டது. ஹரியின் தாயார் இப்பொழுதும் நலமாகவே இருக்கின்றார்.

ஐயா விபூதியின் மகிமை – 3

என் பெயர் குமார். நான் கோவையில் வசித்து வருகிறேன். எனக்கு சிறு வயதுமுதல் (சுமார் மூன்று வயதுமுதல்) சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. என்னுடைய ஒன்பது வயதில் இதற்காக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மாத்திரைகள் உட்கொண்டும் சரியாகவில்லை. அதனால் எனக்கு அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன். இந்த பிரச்சினை காரணமாக நான் அதிக தூரம் பேருந்தில் செல்வதைத் தவிர்த்தேன். இரண்டு மணி நேரத்திற்குமேல் தொடர்ந்து என்னால் பயணம் செய்ய முடியவில்லை. இதனால் என்னுடைய பயணத்தை பைக், கார், இரயில் என்ற வகையில் அமைத்துக் கொண்டேன். இந்தப் பிரச்சினை எனது 33 வயதுவரை இருந்து வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நான் குழம்பிக் கொண்டிருந்தேன். 30 வயதுமுதல் நான் வள்ளலாரை வழிபட ஆரம்பித்தேன். என் பிரார்த்தனைகளில் இப்பிரச்சினை குணமாக வேண்டிக் கொண்டேன். இவ்வாறு இருக்கையில் நான் ஒரு கனவு கண்டேன். கனவினில், இப்பிரச்சினைகுறித்து நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வள்ளலார் தோன்றி எனக்கு ஆறுதல்கூறி வருகின்ற பூசம் அன்று இப்பிரச்சினைதீர வேண்டிக் கொண்டு விபூதியைத் தண்ணீரில் கலந்து குடிக்குமாறு கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். இப்போது அப்பிரச்சினை தீர்ந்து விட்டபடியால் கடந்த 3 முதல் 4 வருடமாக நான் மகிழ்வுடன் இருக்கிறேன். என் பிரச்சினையைத் தீர்த்த அய்யாவை நான் நன்றியுடன் எப்பொழுதும் நினைக்கின்றேன்.

கனவில் என் வலியை தீர்த்தவர்

ராஜன் (வள்ளலார் பக்தர்) மும்பையைச் சேர்ந்த பாந்த்ராவில் வசிக்கிறேன். இரவில் உண்ட உணவினால் வாயுத் தொல்லை சற்று அதிகமாக இருந்தது வலியோடு படுத்து உறங்கிவிட்டேன். உறக்கத்தில் ஒரு கனவு சுற்றிலும் கும்மிருட்டு அதிலே வள்ளல் பெருமானார் என் அருகில் நின்று என்னை பார்க்கிறார், அந்த நேரத்தில் அவர் உருவத்தின் வெளிப்புறம் (outline)மட்டும் நெருப்பினால் ஆன கோடுகள் போல் தெரிகிறது. நான் கண்முழித்து அவரை பார்க்கிறேன் அவர் மறைந்துவிட்டார். பிறகு நான் உறக்கத்தில் இருந்து எழுந்தேன். அப்போது என் வாயுத் தொல்லை பூரணமாக குணமாகியிருப்பதை உணர்ந்தேன். என் தாயார் நான் இரவு முழுவதும் வலியில் முனங்கியபடியே புரண்டு கொண்டிருந்ததாகக் கூறினார். என் வலி கண்டு இரங்கிய பெருமானார் எனக்கு காட்சியும் கொடுத்து என் வலியையும் நீக்கினார் என்றுணர்ந்தேன். என்னே என் குருவின் கருணை.

அமுதாவிற்கு அமுதூட்டியவர்

கல்பனா என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்தாள். ஆரம்பத்தில் அவரது குழந்தையின் வளர்ச்சி இயல்பாக இருந்தாலும், திடீரென்று குழந்தையின் நிலைமை தொடர்பாக கர்ப்பத்தில் சில சிக்கல்கள் உருவாயின. அவரது பெற்றோர்கள் வள்ளலாரின் பக்தர்களாக இருந்தனர். அவர்கள் வடலூர் சென்று குழந்தையின் நன்மைக்காக வேண்டினர். பின்னர் பிரசவம் சுமூகமாக நடந்தது. தாயும் சேயும் நலமுடன் இருந்தனர். கல்பனாவின் கனவில் வள்ளலார் தனது மடியில் அவளது குழந்தையை வைத்து அமுதத்தை ஊட்டி, அமுதா என பெயரிட்டதாகவும், மேலும் இந்த குழந்தை 55 ஆண்டுகள் வரை வாழும் என்றும், அவளின் புண்ணியச் செய்கைகளின் அடிப்படையில், அவளது ஆயுள் மேலும் நீடிக்கும் என்று வள்ளலார் கூறியதாகவும் கண்டார். அந்த கனவின் அடிப்படையில் குழந்தைக்கு அமுதா என பெயரிடப்பட்டது. அக்குழந்தை வள்ளல் பெருமான் ஆசியுடன் சிறப்பாக வளர்ந்து வருகிறது.

சிகிச்சையில்லாமல் குணப்படுத்தியவர்

நாராயணன் குடும்பத்தினர் அய்யாவின் (வள்ளலார்) பக்தர்கள். நாராயணனுக்கு ஒரு குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு சிறுநீரக குழாயில் அடைப்பு இருந்தது. மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு சிறுநீர் குழாயில் சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதில் நாராயணனுக்கு விருப்பமில்லை. அவர் மற்றும் அவரது பெற்றோர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த பிரச்சனையை குணப்படுத்த அய்யாவை வேண்டினர்.

ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் அது எப்படியோ பலமுறை தள்ளிப் போடப்பட்டது. திடீரென்று ஒரு நாள் குழாயில் இருந்த அடைப்பு தானாகவே நீங்கியது.

அவர்கள் பிரார்த்தனையின் படி வள்ளலார் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையின் பிரச்சனையை குணமடையச் செய்தார் என்பதை உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்தனர்.

வடலூரும் ஷீரடியும்

நான் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண். எனக்கு சாதாரண சளியாக இருந்து தீவிரமடைந்த சைனஸ் பிரச்சனை, மூக்கில் இருந்து இரத்தம் கசியும் அளவிற்கு மாறியது. மருத்துவரிடம் விசாரித்த போது இதற்கு அறுவை சிகிச்சையே தீர்வு என்று கூறினார். இந்த பிரச்சனைக்கு 6 மாதங்கள் முன்னரே வேறு ஒரு அறுவை சிகிச்சையையும் மேற் கொண்டிருந்த எனக்கு மனதில் மிகுந்த வேதனையும் குழப்பமும் உண்டாயிற்று. அப்போது மருத்துவர் ஸ்கேன் எடுத்து வருமாறு சொன்னார். அதை எடுத்து சென்ற அன்று அறுவை சிகிச்சைக்கு தேதி குறித்துக் கொடுத்தார். அன்றைக்கு மருத்துவரை சந்தித்துவிட்டு அங்கிருந்து மைலாப்பூர் சாய் கோயிலுக்கு சென்றோம். கண்ணீர் மல்க சாயிடம் முறையிட்ட பின்னர் வெளி வரும் போது, ஒரு மூதாட்டி மார்வலி மாத்திரை வாங்கித் தருமாறு கேட்டார்கள். அதை வாங்கிக் கொடுத்த பின்னர் வீட்டிற்குத் திரும்பினோம் அதன் அர்த்தம் புரியாமல்! அன்று மாலை என் தாய்க்கு தோன்றியது ‘சாயி மருந்தினால் இந்த பிரச்சனையை சரி செய்வார்’ என்பது தான். பின்னர், இந்த அறுவை சிகிச்சையை மேற் கொள்ள வேண்டுமா என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் நான் என் தோழியிடம் இதைப் பற்றிக் கூறினேன். அவள் தன் நண்பரிடம் (வள்ளலாரின் பக்தர் அவர்) கேட்டுக் கூறுவதாகச் சொன்னாள். பின்னர் அவள் கூறியது எனக்கு மேலும் அதிர்ச்சியூட்டியது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது என்றும், செய்தால் மேலும் பிரச்சனை பெரிதாகக் கூடும் என்றும் கூறினாள்.

அவளிடம் ஆலோசனை கேட்டிருக்கக் கூடாது என்றே நான் எண்ணும் அளவிற்கு குழப்பம் அடைந்தேன். அறுவை சிகிச்சைக்கு தேதி குறித்து ஆயிற்று, மருத்துவரும் எங்களுக்கு குடும்ப நண்பரான காரணத்தினால் இதை எப்படி அவரிடம் சொல்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தேன். என் தாய் இதை அனைத்தையும் சாய் மற்றும் அய்யாவிடமே விட்டு விடு என்று கூறினார். என் தோழியிடம் திரும்பவும் பேசும் போது அவள் தைரியமாக இதை நம்பும்படி கூறினாள். மேலும் 30 நாட்களுக்குள் வடலூர் சென்று முடிந்த அளவு (ரூ.1001) அன்னதானமும் செய்யுமாறு கூறினாள். பின்னர் நான் அய்யா மற்றும் சாயியிடமே வேண்டிக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு தயாரானேன். சிகிச்சை அன்று ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும்வரை சாயியை வேண்டி உள்ளே சென்றேன். மயக்கமருந்தளிக்கும் மருத்துவர் தாமதமாக வந்ததால் மற்ற மருத்துவர்களும் காத்திருந்தனர். அங்கு ஏசி மிகுதியாக இருந்ததனால் எனக்கு நல்ல இருமல் வரத் தொடங்கியது. அதுவரை மருந்து எடுத்ததனால் இருமல் குறைவாக இருந்தது! மருத்துவர் வந்த பின்னர் இருமல் மிகுதியாக இருந்ததனால் அப்போதைக்கு அறுவை சிகிச்சையை செய்ய முடியாமல் தள்ளிப் போட்டனர். ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்து அங்கிருந்து வெளியே வந்தேன். என் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், நான் வடலூர் சென்று வேண்டியபடி ரூ.1001 அன்னதானத்திற்கு கொடுத்து வேண்டி வந்தேன். வீட்டில் 10 நாட்கள் ஒய்வு எடுத்து பின்னர் முழுமையாக குணமடைந்தேன். அய்யா கூறியபடி இன்று வரை நான் நன்றாக உள்ளேன், அறுவை சிகிச்சை செய்யாமலேயே பூரண குணமடைந்தது அந்த சளிப் பிரச்சனை.

இதை அய்யா மற்றும் சாயியின் லீலையாக மட்டுமே நான் உணர்கிறேன், நினைத்து நினைத்து பூரிக்கும் அளவிற்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படச் செய்த, எனது வாழ்வில் நடந்த ஒரு அற்புதம் இது!

அன்னதானம் - உயிர் காத்தவர்

ஈஸ்வரி என்ற 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கிறார். அந்த பெண் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் எந்த உணவும் சாப்பிட முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. கிட்டத்தட்ட தன் வாழ்வின் இறுதி நிலையை அடைந்தார். அவர் மகன் ஒரு வள்ளலார் பக்தர். அவரது கனவில் வடலூர் சென்று ரூ.1000/- அன்னதானம் அளித்தால் தாயின் நோய் குணமடைவது போல் கனவு கண்டார். மறுநாளே வடலூர் சென்று கனவை நிறைவேற்றினார். மூன்று நாட்களில் அவரது தாயார் முற்றிலும் குணமடைந்தார், அவரால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்து உணவையும் உண்ண முடிந்தது. இருவரும் ஆச்சரியப்பட்டு அய்யாவின் பெருமையை புகழ்ந்து மகிழ்ந்தனர். 3-4 வருடங்கள் கடந்த பின்பும் கூட, அந்தப் பெண்ணின் உடல்நிலை மிக சீராகவே உள்ளது.

கண்களை குணப்படுத்தியவர்

யமுனா என்ற பெண்மணி வள்ளலாரை வழிபடுபவர். துபாயில் தனது மகள் கருவுற்றிருப்பதால் அவளுக்கு உதவ அங்கு சென்றிருந்தார். இரவில் திடீரென்று அவரது கண்கள் இரண்டும் சிவப்பாகவும், வீக்கமாகவும் இருந்தது. இதை கண்ட அவரது மகள் அவரை அடுத்த நாள் காலை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறினார். அந்த ஊர் அவருக்குப் புதிதாக இருந்ததால் மருத்துவரிடம் செல்ல தயக்கமாக இருந்தது. எனவே, அவர் அய்யாவை (வள்ளலார்) அவரது பிரச்சனையில் இருந்து விடுவிக்க வேண்டிக்கொண்டார். காலையில், விழித்த போது அவர் கண்கள் சாதாரணமாக மாறியிருப்பதை உணர்ந்தார். வள்ளலார் தன்னைக் குணப்படுத்தியதை எண்ணி மகிழ்ந்தார்.

மனைவியின் மரணம் தவிர்த்தவர்

சிவா என்ற வள்ளலாரின் பக்தர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச், சேர்ந்தவர். 1980ஆம் ஆண்டு அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் இருந்தனர். அவரது மனைவி பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். தினமும் சிவா தன் வீட்டில் நுழையும் போது, "உன்னுடைய மனைவி இறந்து விடுவாள்" என்று அவருக்கு ஒரு குரல் உள்ளே கேட்டது. ஆரம்பத்தில் அவர் இதைப் பெரிதாக நினைக்கவில்லை, ஆனால் ஒரு வாரமாக தொடர்ந்து இந்த செய்தி கேட்டு கொண்டே இருந்தது. அதனால் அவருக்கு மனவுளைச்சல் அதிகரித்தது. அவரது குழந்தைகள் இருவரும் சிறுவர்கள், ஒருவனுக்கு 8 வயது மற்றொருவனுக்கு 2 வயது. தாய் இல்லாமல் தனது இரண்டு குழந்தைகளின் நிலைமையை நினைத்து பார்க்கக் கூட அவரால் முடியவில்லை. வள்ளலாரின் படத்திற்கு முன் நின்று "நான் என்ன செய்வேன்" என்று புலம்பினார். அவர் தனது மனைவியைக் காப்பாற்ற மனம் உருகி அய்யாவிடம் வேண்டினார். 10 நிமிடங்கள் சென்ற பின், திடீரென அவரது மனக்கண்ணில் அய்யாவின் புகைப்படம் தங்க நிற ஒளியில் மின்னியது. மேலும் வள்ளலார் ஒளியில் இருந்து வெளியில் செல்வதுபோல் தெரிந்தது. சிவா தன் மனதில் அமைதியை உணர்ந்தார். கண்டிப்பாக வள்ளலார் தன் மனைவியை காப்பாற்றுவார் என்று நம்பினார். பின்னர் விசாரித்தபொழுது, அந்த நேரம் அவரது மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையும், பின்னர் அவர்கள் நலமுடன் இருப்பதையும் தெரிந்துக்கொண்டார். சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்றும் வள்ளலாரை தவறாமல் வழிபடுகின்றனர்.

கருணையும் உணவும்

என் பெயர் கௌரிசங்கர். நான் சென்னையில் வசிக்கிறேன். என் மகனைக் குணப்படுத்தி திருவருட்பிரகாச வள்ளலார் ஒரு அற்புதம் நிகழ்த்தியது பின்வருமாறு:

என் மகனின் 1ம் வயதில் ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்காக ஸ்டெராய்டு மருந்துகள் எடுத்து கொண்டதால் அவனது முழு உணவுக்குழாய் மற்றும் தொண்டை பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக, அவன் எந்த உணவு உட்கொண்டாலும் வாந்தி எடுத்து கொண்டிருந்தான். அவனால் ஒரு நாள் கூட வாந்தி எடுக்காமல் இருக்க முடியவில்லை. அவன் உடல் நிலையும் பலவீனமடைந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் இந்த குறையைத் தீர்க்க முடியவில்லை. அப்பொழுதுதான் நாங்கள் அய்யாவை வழிபடத் தொடங்கியிருந்தோம். அய்யா சொன்னவாறு அவனுக்கு அசைவ உணவுகளை முழுமையாக நிறுத்தினேன், பின்பு என் மகனை வடலூர் அழைத்து சென்றேன். இரண்டாவது பயணத்திற்கு முன்பாகவே அவனது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து, வாந்தியும் நின்றுவிட்டது. அதன்பிறகு அவன் முற்றிலும் குணமடைந்து மற்ற குழந்தைகளைப் போல் விளையாடத் தொடங்கினான். உடல் எடையும் கூடியது. என் மனைவி அவன் முற்றிலுமாகக் குணமடைவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள். பின்னர் என் மனைவியும் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கினாள்.

உடனடி நிவாரணம்

என் பெயர் நிலா. நான் கோயம்பத்தூரில் வசிக்கிறேன். நான் வள்ளலாரின் பக்தை. ஜீன் 2012, அன்று என் கணவர் வடலூர் சென்றுத் திரும்பினார். அன்று, எனக்கு தலைவலி மிகுதியாக இருந்தது, என்னால் வலி தாங்கமுடியவில்லை. என் கணவரிடம் இதைப் பற்றி கூறினேன். அவர் சித்தி வளாகத்திலிருந்து கொண்டு வந்த புனித திருநீற்றை என் நெற்றியில் தடவினார். வலி உடனே மறைந்தது.

வேலையைக் கொடுத்தவர்

சைதாப்பேட்டையில் ரமேஷ் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நிரந்தர வேலை இல்லை, மேலும் அவருக்கு நீண்ட நாள் பிரச்சனையாக தனது மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் கசிந்தது. அவர் பல மருத்துவர்களை சந்தித்தும் அவருடைய பிரச்சனை சரியாகவில்லை. அவருடைய நண்பர் மணி (வள்ளலார் பக்தர்) என்பவரை சந்தித்து அவருடைய பிரச்சனையை சொன்ன பொழுது, அவர் வள்ளலாரை வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ரமேஷ் வள்ளலாரை வழிபடத் தொடங்கிய 2-3 வாரங்களில் இரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இருந்த அந்த பிரச்சனை மீண்டும் அவருக்கு ஏற்படவில்லை. வள்ளலார் அருள் மூலம் அவருக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. இப்போது அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல நிலையில் உள்ளார்.

வலியைத் தீர்த்தவர்

நான் திருநெல்வேலியிலிருந்து திரிபுரசுந்தரி. வள்ளலாரின் பக்தை.ஜனவரி 2012, நான் எங்களது இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையில் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட வலியால் நான் மிகவும் அவதிப்பட்டேன். அடுத்த நாள் இரவு, வலி தாங்க முடியாமல் துடித்தேன். வள்ளலாரை வணங்கி எனது வலியை சரி செய்யுமாறு வேண்டினேன். என் கணவர் எனக்கு வள்ளலாரின் திருநீற்றைக் கொடுத்தார். நான் வள்ளலாரை ஒவ்வொரு கணமும் எனது வலியை போக்குமாறு பிரார்த்தித்து புனிதமான அய்யாவின் திருநீற்றைப் பூசினேன். அப்போது இரவு 11 மணியிலிருந்து ஒரு மணி நேரம் தொடர்ந்து எனக்கு வாந்தி ஏற்பட்டது. அதன் பிறகு நான் எனது வலியில் இருந்து முழுவதும் விடுபட்டேன். வள்ளலாரின் கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின.

தர்மமும் ஆயுளும்

கோவிந்தின் நண்பர் ஒருவர், கோவிந்த் ஒரு விபத்தில் மரணமடைவது போல் கனவு கண்டார். அவர் வள்ளலாரின் பக்தர் என்பதால் கோவிந்திற்காக வேண்டிக்கொண்டார். வள்ளற்பெருமான் கோவிந்தின் நண்பர் கனவில் வந்து கோவிந்தை வடலூருக்கு வரச்சொன்னார். நண்பரின் வேண்டுகொளுக்கிணங்க கோவிந்தும் வடலூருக்கு சென்று தன்னைக் காப்பாற்றுமாறும் ஐயாவிடம் கேட்டுக்கொண்டார். அன்றிரவு வள்ளலார் கோவிந்தின் கனவில் தோன்றி அவரது ஆயுட்காலத்தில் மேலும் 25 ஆண்டுகள் கூடும் என்று கூறினார். அதற்கு மேல் அவர் செய்யும் தர்மமும், உயர்ந்த செயல்களும் அவரின் ஆயுளை மேலும் நீட்டிக்கும் என்று கூறினார். அப்போது கோவிந்துக்கு முப்பது வயது. ஐந்து வருடம் கழிந்துவிட்டது. அவர் இப்போதும் நன்றாக இருக்கிறார். மேலும் வள்ளலாரின் தீவிர பக்தனாகவும் மாறிவிட்டார்.